சந்தோஷமான வாழ்க்கைக்கு எது முக்கியம் - சியோ தமிழ்

Breaking

Friday, February 2, 2018

சந்தோஷமான வாழ்க்கைக்கு எது முக்கியம்



ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கோங்க. நாம கேட்குற கேள்விக்கு டக்கு டக்குன்னு அதுல பதிலை எழுதிட்டு வாங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு போங்க.

அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ஓகே?

1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..

2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களை ஒரு நாலு பேரை சொல்லுங்க பார்க்கலாம்…

3. சர்வதேச அளவுல நடக்குற அழகிப் போட்டிகள்ள ஜெயிச்ச இந்திய பெண்கள் (மிஸ் யூனிவர்ஸ்…மிஸ் வேர்ல்ட் இப்படி) ஒரு நாலு பேரை சொல்லுங்க….

4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேரை சொல்லுங்க…..

5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பேரை சொல்லுங்க பார்க்கலாம்…

உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே?

நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல. அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள். மிகப் பெரிய சாதனையாளர்கள். ஆனால்……? கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன. சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன. விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.

இதோ மற்றொரு வினாடி வினா…

1) உங்கள் பள்ளிக் காலத்தில் மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று ஆசிரியர்களை சொல்லுங்கள்.

2) உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று நண்பர்களை சொல்லுங்கள்…

3) உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்…

4) உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை பட்டியலிடுங்கள்….

5) நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்…

அட… விடைகளை பட் பட்டென்று எழுதிக் குவித்திருப்பீர்களே!!!..

இதிலிருந்து என்ன தெரிகிறது?

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பணக்காரர்களோ, புகழ்பெற்றவர்களோ அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல. உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே. மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.

பணம் பட்டம் பதவி இவற்றின் மூலம் பெரும் புகழோ வெற்றியோ நிலையானதல்ல. பிறருக்கு உதவி செய்து, பிறர் மீது அக்கறை கொண்டு ஒருவர் பெறும் புகழே வெற்றியே நிலையானது.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு, அவர்கள் ஒருவராவது விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்… நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். (கேட்டுப் பாருங்களேன்!)

எனவே அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கவேண்டுமென்றால் எப்போதும் யாருக்கும் நல்லதே நினையுங்கள். நல்லதையே சொல்லுங்கள். நல்லதையே செய்யுங்கள்.

கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும்.
முதல்ல நம்மை சுத்தி இருக்குற மனுஷங்க மனசுல நமக்கு இடம் இருக்கான்னு முதல்ல பார்ப்போம்.

கடவுள் தானா தன் மனசுல இடம் கொடுப்பார்.

Pages